நிபுணர் குழு கண்துடைப்பு நாடகம்; தெரிவுக்குழுவே அமையவேண்டும் சஜித் அணி வலியுறுத்து.

“புதிய அரசமைப்பை இயற்றுவதற்கான நிபுணர் குழு என்பது கண்துடைப்பு நாடகம். எனவே, இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டும்.”

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஸ்மன் கிரியெல்ல எம்.பியே அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“புதிய அரசமைப்பு தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தைக் கையாளும் நிபுணர்கள் குழுவில் அரசுக்கு சார்பான சட்டத்தரணிகளே இடம்பெற்றுள்ளனர். இப்படியான குழுவின் முன்னால் யோசனை முன்வைத்து தமது தரப்புக்கு பழக்கமில்லை என்று எமது சட்டத்தரணிகள் தெளிவாக எடுத்துரைத்தனர்.

ஒன்று, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்பு நிர்ணய சபையாக மாற்றி அதன் ஊடாக புதிய அரசமைப்பை இயற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். பல தரப்பு கலந்துரையாடல்களை நடத்தி, உரிய தீர்வை எட்டுவதற்கு இதுவே பொருத்தமான களமாக அமையும்.

அதேவேளை, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து அரச தரப்புக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லை என நிபுணர்கள் குழுவால், எமது சட்டத்தரணிகள் குழாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பமே குழப்பமாகவும், அரசுக்குள் முரண்பாடும் உருவாகியுள்ளது. இந்தநிலையில், எப்படி நாம் யோசனைகளை முன்வைப்பது. இது கண்துடைப்பு நாடகமாகும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசுக்குத் தோல்வி உறுதி. எனவே, புதிய அரசமைப்பைக் காரணம் காட்டி தேர்தலை இழுத்தடிப்பதே அரசின் நோக்கம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.