விஜயகலா மீது நடவடிக்கை! சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருக்கும் சி.ஐ.டி.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்சைக்குரிய கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கையெடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக சி.ஐ.டியினரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும், ஆனால் இன்னும் அவரின் ஆலோசனை கிடைக்கப் பெறவில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

2018 ஜுன் 2 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்தொன்று தென்னிலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இவர் நாட்டின் அரசமைப்பை மீறி விடுதலைப்புலிகளை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்து சிங்கள ராவய அமைப்பால் சி.ஐ.டியில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் விஜயகலா மகேஸ்வரனை 2018 ஒக்டோபர் 8ஆம் திகதி கைதுசெய்தனர். அதன் பின்னர் அன்றைய தினமே நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு மீண்டும் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை என்று சி.ஐ.டியினர் அறிவித்த நிலையில், நீதிவானால் சட்டமா அதிபருக்கு நினைவூட்டும் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டது.

இதேவேளை, இந்த வழக்கை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அன்றைய தினத்தில் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் சி.ஐ.டியினருக்கு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.