யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான நபருக்கு விளக்கமறியல்!

ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட்டுக்கோட்டை மாவடியில் வீடொன்றில் போதைப்பொருள் உள்ளதாக சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அங்கு சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய வீட்டின் உரிமையாளரும் அங்கு வந்திருந்த மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது பிரதான சந்தேகநபரான வீட்டின் உரிமையாளரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு கைதுசெய்யப்பட்ட மற்றைய நபருக்கும் போதைப்பொருளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று பிரதான சந்தேகநபர் கூறியதையடுத்து அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.