சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மீது கொலைவெறித் தாக்குதல்! – படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நாவற்குழியில் 300 வீட்டுத்திட்டம் பகுதியில் இன்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான சமரச முயற்சிக்குச் சென்ற சாவக்சேரி பிரதேச சபை உறுப்பினரான இராமநாதன் யோகேஸ்வரன் என்ற உறுப்பினர் மீது சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கத்தியால் வெட்டிப் படுகாயம் அடைந்த அவர் மீது கற்களாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு திருட்டுச் சம்பவங்களை உடனடியாக முறிடியத்த நடவடிக்கைக்கு குறித்த பிரதேச சபை உறுப்பினர் தலைமை தாங்கியிருந்தார் என்று தெரியவருகின்றது.

இன்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் துணையுடன் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 300 வீட்டுத்திட்டம் பகுதியில் மோதல் சம்பவம் இடம்பெறுகின்றது என அவருக்குத் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.

சம்பவத்தை அடுத்து சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக தனியாக அவர் அங்கு சென்றிருக்கின்றார். சென்ற பின்னரேயே திட்டமிட்டு அவர் வரவழைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கின்றது.

அங்கு அவரின் தலை மீது கத்தியால் வெட்டப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டிருக்கின்றார். அதன் பின்னர் அங்கு நின்றிருந்த சிலர் கற்களால் அவரின் தலை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.