சுகாதார விதிமுறைகளை மீறினால் மே மாதம் கொரோனாத் தாக்கம் உச்சமடையும்! -இராணுவத் தளபதி எச்சரிக்கை.

“நாட்டு மக்கள், கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தடுப்புச் சட்டங்களை மீறி பொருள் கொள்வனவுகளில் ஈடுபடும் மக்கள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

மக்கள் இவ்வாறு கட்டுப்பாடின்றி செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

சித்திரைப் புத்தாண்டு காலப் பகுதியில் கொரோனாத் தடுப்பு தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்படும் பட்சத்தில், வேறு எந்தவொரு பண்டிகைகளையும் கொண்டாட முடியாது போகும்.

பெருமளவான மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.