கட்டுக்கடங்காத கொரோனா வைரஸ் தொற்று; சுகாதார ஒழுங்கு விதிகளை மீறினால் கைது! – – பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் வீரியமடைந்துள்ள நிலையில், சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோருக்குக் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளிகளைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார ஒழுங்கு விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி பொது இடங்களில் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறும் நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் முகக் கவசம் அணியாது சுற்றித் திரிந்த சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

வீட்டில் இருந்து வெளியே வரும்போது முகக் கவசங்கள் அணிவது கட்டாயம் எனவும், ரயில்கள், பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது மறக்காது முகக் கவனத்தை அணிந்து சமூக இடைவெளியைப் பேண வேண்டும் எனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லுதல், சுகாதர அதிகரிகளின் அனுமதியின்றி நடத்தப்படும் நிகழ்வுகள் தொடர்பாகவும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர் எனவும், இவ்வாறாக ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.