யாழில் 7 பேர் உட்பட வடக்கில் 9 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கும், கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 408 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 9 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் இருவருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் கேகாலை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கும் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கொரோனாத் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் எனச் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்களாவர்.

இதேவேளை, பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவராவார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.