ரஞ்சனுக்காக, ஹரின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய ரெடி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால், ரஞ்சன் மீண்டும் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தனது தேசிய பட்டியல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமாறு கோரப்பட்ட கோரிக்கைகளின் காரணமாக ராஜினாமா செய்ய ஹரின் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐதேகவில் தனது பதவிக் காலத்தில், ஊவா மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு முன்னர் ஹரின் வெற்றி பெற்றார். இது இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக மக்களை பேச வைத்தது.

ரஞ்சனை விடுவிக்குமாறு சஜித்திடம் எழுத்து மூல கோரிக்கை!

இதற்கிடையில், முன்னாள் கம்பாஹ மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கோரிக்கைக்கான காரணங்களைக் கூறி எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐக்கிய மக்கள் சக்தி குழு கூட்டத்திற்கும் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ரஞ்சன் ராமநாயக்க, தற்போது அகுனபெலஸ்ஸ சிறையில் நான்கு ஆண்டுக்கான சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

அமைச்சர் நமல் ராஜபக்ஷ சமீபத்தில் சிறையில் அவரை சந்தித்து அவருடன் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது நாமல் எழுத்து மூலம் ஜனாதிபதி மன்னிப்புக்காக கோரிக்கை விடுக்குமாறு ரஞ்சனுக்கு தெரிவித்ததாக உள்ளக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.