சச்சின் டெண்டுல்கர் கொரணாவில் இருந்து மீண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கருக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து சில நாட்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த 8-ந் தேதி வீடு திரும்பி தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்தார். தற்போது தெண்டுல்கர் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு விட்டார். சாதனை நாயகன் தெண்டுல்கருக்கு நேற்று 48-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை அவர் குடும்பத்தினருடன் எளியமுறையில் கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி தெண்டுல்கருக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தெண்டுல்கர் நேற்று டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், ‘உங்கள் அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களின் வாழ்த்துகள் இந்த நாளை மேலும் சிறப்பாக்கியது. கடந்த மாதம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு டாக்டர்களின் அறிவுரைப்படி 21 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கொரோனாவில் இருந்து மீண்டு வர டாக்டர்கள் எனக்கு உதவியாய் இருந்தார்கள். உங்களின் பிரார்த்தனைகளும் எனக்கு துணையாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘கடந்த ஆண்டு நான் பிளாஸ்மா தானம் செய்யும் மையத்தை தொடங்கி வைத்தேன். இந்தநேரத்தில் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தயவு செய்து உங்களுடைய ரத்த பிளாஸ்மாவை தானம் செய்யுங்கள். அது தேவைப்படும் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும். நானும் அதை செய்ய இருக்கிறேன், மருத்துவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பிளாஸ்மா தானம் செய்வேன்’ என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.