கொரோனாவுக்குள் அரசியல் வேண்டாம்; கட்டுப்படுத்த சகலரும் ஒத்துழையுங்கள்! பிரதமர் மஹிந்த வேண்டுகோள்.

“நாட்டின் தேசிய அனர்த்தம் எனக் கருதி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அபாயகரமான இந்தச் சூழ்நிலையில் அரசியல் இலாபம் பெறும் வகையில் சிலர் செயற்படுவது பொருத்தமற்றது.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் சரியான முறையில் சுகாதார வழிக்காட்டல்களைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சிலர் அரசியல் பேதங்களை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகளைப் போட்டுக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றனரே அன்றி கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்பது அவர்களின் உண்மையான நோக்கமல்ல என்பது தெளிவாகியுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாடு மற்றும் மக்களுக்காகக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தால் அது எவருக்கும் முன்னுதாரணமாக அமையும்.

நாட்டில் இப்படியான பிரச்சினை ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையில் அரசியல் இலாபம் பெறும் வகையில் சிலர் செயற்படுவது பொருத்தமற்றது.

இப்படியான ஆபத்தான சந்தர்ப்பத்தில் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு, பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் சேவை அனைவருக்கும் முன்னுதாரணம்.

அதேபோல் மக்களும் சுகாதார ஆலோசனைகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இது அரசியல் நோக்கங்களுக்காகச் செயற்படும் நேரமல்ல” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.