ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் (05) புதன்கிழமை உத்தவிட்டுள்ளார்.

அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 283 கொரோனா நோயாளிகளுக்காக இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருகோணமலை, கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் 50 பேருக்கும், நிலாவெளி ஆயுர்வேத வைத்தியசாலையில் 48 பேருக்கும், மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு சித்த தள ஆயுர்வேத வைத்தியசாலை 60 பேருக்கும், எறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும், அம்பாறை, வேரண்கட்டுகொட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் 30 பேருக்கும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை 30 பேருக்கும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் 30 பேருக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியினை கொவிட் – 19 தொடர்பான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோப்பிள்ளை (04) செவ்வாய்க்கிழமை வழங்கியிருந்தார்.

இதனையடுத்தே, கிழக்கு மாகாணத்திலுள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை மையங்களாக மாற்றும் நடவடிக்கையினை மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.