நயினாதீவு நாக விகாரையில் தங்கி நின்றவருக்குக் கொரோனா!

நயினாதீவு நாக விகாரை அளவீட்டுப் பணிக்கு வந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதோடு மேலும் ஒருவருக்கு மீண்டும் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

நயினாதீவின் நாக விகாரையைச் சூழவுள்ள பிரதேசம் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த அப்பகுதியை அளவீடு செய்வதற்காக வந்தவர்களில் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 7ஆம் திகதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விகாராதிபதி உள்ளிட்ட இரு பௌத்த பிக்குகளுக்கும், 9 கடற்படையினர், அளவீட்டுக்கு வருகை தந்த உத்தியோகத்தர்கள் உட்பட 27 பேரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டன.

இவற்றின் பெறுபேறுகளின் அடிப்படையில் 4 பேர் தவிர்ந்த ஏனையோருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதுடன் 4 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய 4 மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் ஒருவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டதோடு இருவருக்கு இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய ஒருவருக்கு மீண்டும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.