யாழ். கைதடியில் பெரும் விபத்து தவிர்ப்பு!

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது. அதனால் எதிரே பயணித்த 4 வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியை விட்டு விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

யாழ். கைதடிப் பாலத்துக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் ஏ – 9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.

காரைநகர் சாலைக்குச் சொந்தமான பஸ் ஏ – 9 கண்டி வீதியூடாக யாழ்ப்பாணத்துக்குப் பயணித்துள்ளது. கைதடிப் பாலத்தைக் கடக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.

பஸ் தடுமாறிப் பயணித்ததால் எதிரே பயணித்த வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியிலிருந்து விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.

கடும் மழை பொழிந்து கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து பஸ்ஸில் பயணித்தவர்கள் மற்றொரு பஸ்ஸில் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.