கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போடலாம்; எந்தச் சிக்கலும் இல்லை என ஆய்வில் உறுதி.

கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி போடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.

பிரிட்டனில் உள்ள மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய, தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இதுவரை எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது நிலவும் அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்கள், கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்துள்ள பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பது பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் கொரோனாத் தொற்றால் குறுகிய இடைவெளியில் இரண்டு கர்ப்பிணித் தாய்மார் இறந்துள்ளனர். இது தாய் இறப்பு விகிதத்தில் மிகப்பெரிய அதிகரிப்பாகும். அத்தோடு இது மேலும் அதிகரிக்கக் கூடும்.

இந்தநிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது இதனைத் தடுப்பதற்கான முக்கிய உத்திகளில் ஒன்றாகும்.

கொரோனாத் தொற்று நோய் பரவல் அதிகம் பதிவாகியுள்ள கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் கண்டி ஆகிய முக்கிய மாவட்டங்களில் தடுப்பூசித் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.