கொரோனாத் தொற்றாளர் கூடிய மாகாணங்களே தடுப்பூசி ஏற்றலில் முதல் தெரிவு! – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.

“கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை கூடிய மாகாணங்களிலேயே தடுப்பூசி முதல் கட்டமாக ஏற்றப்படும்.”

இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண மக்களுக்கு எப்போது தடுப்பூசி ஏற்றப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புத்தாண்டுக் கொத்தணி எல்லா மாவட்டங்களிலும் பரவலடைந்துள்ளது. இந்த நிலையில் முதல் கட்டமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடை செய்துள்ளோம்.

கொரோனாத் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாக மேல் மாகாணமே காணப்படுகின்றது. இந்த நிலையில் முதல் கட்டமாக அந்த மாகாணத்தில் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை கண்டறிந்து அந்த மக்களுக்கு கொரோனாத் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகளை முன்னெடுக்கின்றோம்.

அதற்கு அடுத்தபடியாக தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த மக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுவோம்.

எதிர்வரும் நாள்களில் வெளிநாடுகளிலிருந்து நாம் எதிர்பார்க்கின்ற தடுப்பூசிகள் வந்தடையவுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.