தோட்ட குடியிருப்பில் தீ; 8 வீடுகள் சேதம்,37 நபர்கள் பாதிப்பு.

நானுஓயா சமர்செட் தோட்டப்பகுதியில் 10 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமாகியுள்ளது.

இந்த வீடுகளில் குடியிருந்த 8 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. குறித்த தோட்டத்தில் 2ஆவது இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது. இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட வாசிகசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் நானுஓயா பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.