மட்டக்களப்பு மாவட்டத்தின் கொவிட் நிலவரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவின் மூன்றாவது அலையின் பின்னர் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுவதனைத் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று 27.05.2021 ஆந் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொவிட் நிலவரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலின்போது, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நோயாளர்களுக்கான இடப்பற்றாக்குறை மற்றும் இக் காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் கொவிட் நிலையினை கட்டுப்படுத்துவது மற்றும் மாவட்டத்தில் உள்ள மக்களிற்கான நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், மக்களுக்கு பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக பல்வேறுபட்ட ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சுகாதார அமைச்சருடன் தொடர்பு கொண்டு ஐயாயிரம் தடுப்பூசிகளை வழங்குமாறு கோரியதட்கு அமைய விரைவில் வழங்குவதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்தார் . இவ் தடுப்பூசிகள் வந்தடைந்ததும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

(சதாசிவம் நிரோசன்)

Leave A Reply

Your email address will not be published.