யாழில் மேலும் 22 புதிய தடுப்பூசி நிலையங்கள்! – மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மேலும் 22 புதிய தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் இடம்பெறும் தடுப்பூசி போடும் நிலையத்துக்கு இன்று விஜயம் செய்தபோதே அவர் ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் மக்கள் ஆர்வமாகத் தடுப்பூசி போடுகின்றார்கள். சில இடங்களில் ஆர்வம் குறைவாக உள்ளது.

சினோபார்ம் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும். இது பல இடங்களில் செலுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் தற்போது இந்தத் தடுப்பூசி கிடைத்துள்ளது. ஆகவே, மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தடுப்பூசியைப் போட வேண்டும்.

இந்தப் பணியை நாங்கள் நேற்று ஆரம்பித்தபோது பலரும் தயக்கம் காட்டிய நிலையே இருந்தது .நேற்று எமது இலக்கில் 52 வீதத்தையே எம்மால் அடைய முடிந்தது. அடுத்த சில தினங்களுக்குள் இந்தப் பணியைச் செய்து முடிக்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் தங்கள் கிராம சேவகர் பிரிவிலுள்ள தடுப்பூசி போடும் மத்திய நிலையங்களுக்குச் சென்று அச்சமின்றி தடுப்பூசியைச் செலுத்த முடியும். தடுப்பூசி போடும்போது அவர்களுக்கு ஏதாவது நோய் அல்லது ஒவ்வாமை ஏற்படுமானால் சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டலைப் பின்பற்றமுடியும்.

நாளை மேலும் 22 புதிய தடுப்பூசி போடும் நிலையங்கள் உருவாக்கப்படும். அந்த நிலையங்கள் பற்றிய விவரங்கள் கிராம உத்தியோகத்தர் ஊடாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.