யாழில் பிறந்த அன்றே குழந்தையை அடித்துக் கொலைசெய்த பெற்றோர் கைது!

யாழ்ப்பாணத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அக்குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை, தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோரான தம்பதியரே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

குறித்த பெண் கடந்த 22ஆம் திகதி வீட்டில் குழந்தை பிரசவித்துள்ளார். அதையடுத்து அவருக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டமையால் , மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையின்போது குழந்தை பிரசவித்தீர்களா? என வைத்தியர்கள் கேட்டபோது, அவர் ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளார். இறுதியாக குழந்தை பிரசவித்ததை ஏற்றுக்கொண்டார்.

குழந்தையைத் தூக்கும்போது கை தவறி விழுந்து உயிரிழந்து விட்டது எனவும், குழந்தையின் சடலம் வீட்டிலேயே உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதைடுத்து வைத்தியர்கள் வீட்டாரிடம் குழந்தையின் சடலத்தை உடனடியாக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தனர்.

குழந்தையின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதும் பிரதே பரிசோதனை மேற்கொண்டபோது குழந்தையின் தலையில் அடிகாயம் இருந்தமை உறுதியாகியது.

இந்நிலையில், குறித்த பெண் நேற்று வைத்திய சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பி இருந்தார். இன்று (01) மாலை அவர்களின் வீட்டுக்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார், குறித்த பெண்ணையும் கணவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.