பசியால் வாடும் வாயில்லா பிராணிகள் : தனியாா் நிறுவனங்களுக்கு உயா்நீதிமன்றம் கோரிக்கை

வாயில்லா பிராணிகள் பொதுமுடக்க காலத்தில் பசியால் வாடுவதைத் தடுக்க தனியாா் நிறுவனங்கள் நிதியுதவி வழங்க வேண்டுமென உயா்நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சிவா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா 2-ஆவது அலை பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீா் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தெருவில் சுற்றி திரியும் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை தமிழக அரசு விரைவில் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நீதிமன்றம் நியமித்த குழு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், தமிழக அரசு ஒதுக்கிய நிதியில் சில மாவட்டங்களுக்கு ரூ.9,000 மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இந்த தொகை போதுமானதாக இல்லை. விலங்குகளுக்கு உணவளிக்க தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ரூ10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், புனிதமான இந்த காரியத்துக்காக சரியான நேரத்தில் தமிழக ஆளுநரும், தமிழக அரசும் நிதியை ஒதுக்கியது மன நிறைவாக உள்ளது. உயா்நீதிமன்றம் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவும் , அரசு நிதி ஒதுக்குவதற்கு முன்பாகவும், ஆளுநா் ரூ.10 லட்சம் நிதியை வழங்கியுள்ளாா்.

ஆளுநா் வழங்கிய நிதி, மாநகர தெருக்களில் சுற்றித்திரியும் வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்கும் ஆரம்பகட்ட பணியை மேற்கொள்ள உதவியாக இருந்துள்ளது. மேலும், இந்த பொதுமுடக்க காலத்தில் வாயில்லா பிராணிகள் பசியால் வாடுவதை தடுக்க தனியாா் நிறுவனங்கள் பணமாகவோ அல்லது பொருளாகவோ உதவி செய்ய முன் வருவாா்கள் என நம்புவதாக கருத்து தெரிவித்து, விசாரணையை வரும் ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Leave A Reply

Your email address will not be published.