மக்கள் சேவைக்கு பின்னரே அரசியலுக்கு வந்திருக்கிறோம். மக்கள் ஆதரிப்பார்கள் : கணேஸ்வரன் வேலாயுதம்

மக்களுக்கு சேவை செய்துவிட்டுதான் நான் உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். ஆகவே நிச்சியமாக யாழ் மக்கள் என்னுடைய வெற்றிக்கு பங்களிப்பு நல்குவார்கள். நாங்கள் மூன்று பிரதிநிதித்துவங்களை யாழ் மாவட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்வோம்’ என்று சஜித் பிரேமதாச தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மை வேட்பாளரும் சிவன் பவுண்டேசன் அமைப்பின் இயக்குனருமான கணேஸ்வரன் வேலாயுதம் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

கேள்வி: நீங்கள் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புக்கள் உண்டா?

பதில்:
2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டேன். சுயேட்சையாக நின்று 1400 வாக்குகளை பெற்றேன். அன்றிருந்து இன்றுவரை இந்த மக்களை விட்டு வெளியே செல்லாமல் தொடர்ந்து மக்களுடைய குறை நிறைகளை நிவர்த்தி செய்து வருகின்றேன். அந்த வகையில் யார் உண்மையாக வேலை செய்கிறார்கள் என்று மக்களுக்கு நன்கு தெரியும் . கடைசிநேரத்தில் வந்து எதிர்ப்பு வாத அரசியலைப் பேசி வாக்குகள் பெற்றுக்கொள்ளும் செயலை நான் செய்யவில்லை. ஆகவே நிச்சயமாக மக்கள் எங்களுடைய வெற்றிக்கு பங்களிப்பு நல்குவார்கள் என்று கருதுகின்றேன்.

கேள்வி: நீங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் என்ன?

பதில்:
கடந்த ஐந்து வருடங்களாக சுமார் ஐந்து கோடி ரூபா பொதுமக்களின் தேவைக்காக செலவு செய்துள்ளேன். இதில் சுமார் 50 லட்சம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு பணமாகும். மிகுதிப்பணம் என்னுடைய சொந்த நிதியாகும். பின்தங்கிய கிராமங்களில் வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பிரத்தியேகமான மாலை நேர வகுப்புக்கள் ஏற்பாடு செய்தோம். மெல்லக்கற்கும் மாணவர்களின் மேம்பாட்டுக்காகவும் பிரத்தியேக வகுப்புக்கள் செய்தோம்.

இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நன்மை அடைந்தார்கள். விளையாட்டு துறையில் திறமை காட்டி வரும் வீரவீராங்கனைகளை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் பல செய்து வருகின்றோம். சத்துணவுக்காக நிதியுதவிகள் பிரயாணசெலவுகள் பயிற்றுவிப்பதற்கான உதவிகள் எனப் பல தரப்பட்ட உதவிகள் செய்துள்ளேன்.

கல்விக்காகவும் மக்களின் அடிப்படைத் தேவைக்காகவும் எத்தனையோ விதமான மனிதாபிமான உதவிகள் செய்துள்ளேன். என்னுடைய முகப்புத்தகத்திற்கு சென்று ஆராய்ந்து பார்த்தால் ஆதாரங்களுடன் அறிந்து கொள்ளலாம்.

கேள்வி: நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான காரணம் என்ன?

பதில்:
கடந்த 70 வருடங்களாக எமது தமிழ் தலமைகள் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக இனவாத அரசியலைப்பேசிக்கொண்டு தங்கள் குடும்பத்திற்கு தேவையான சகல சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்று எமது தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள். நான் 16 வயதில் தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டவன். அந்தப்போராட்டம் சரியான பாதையில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நாட்டை விட்டு வெளியே சென்று விட்டேன். இன்று எனக்கு வயது 52 ஆகும். தமிழ் மக்களுக்கு எதிராக அநியாயங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாமலும் அம்மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் நான் அரசியலில் பிரவேசித்தேன். நான் வெற்றி பெறும் பட்சத்தில் மாதாந்தம் வழங்கப்படும் சம்பளத்தையோ வாகன பெமிட்களையோ பெறப்போவதில்லை. அவற்றை மக்களுக்கு பெற்றுக்கொடுத்து மக்களின் தேவையினை நிறைவு செய்வேன்.

கேள்வி: தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சனைகள் தொடர்பாக நீங்கள் வைக்கின்ற கருத்துக்கள் எவை?

பதில்:
நாங்கள் விடுதலைப்போராட்டம் செய்திருக்கின்றோம். ஆயுதப்போராட்டம் நடத்தியிருக்கின்றோம். வெற்றிபெற முடியாத பாதையில் இன்னும் பயணிக்க வேண்டும் என்று கூறுவது அர்த்தமில்லாதது. நாங்கள் தமிழ் மக்களுடைய பிரச்சனையை தீர்க்க வேண்டுமாயின் கல்வி பொருளாதார ரீதியில் முன்செல்ல வேண்டும். சர்வதேச நாடுகள் உதவும் என்று கூறுகிறார்கள். ஒரு பெரும்பான்மையை எதிர்த்து ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக சர்வதேச சமூகம் ஒத்துழைக்கும் என்பது நம்ப முடியாத காரியமாகும். எங்கள் நிலப்பரப்பில் எண்ணெய்வளம் தங்கம் இருக்குமாயின் சர்வதேச சமூகம் உதவ முன்வரும். ஆனால் எங்களுடைய நிலப்பரப்பில் அப்படியான வளங்கள் எவையும் இல்லை. பொருளாதார ரீதியாக முன்னுக்கு வருவோமாயின் எமது பிரச்சனைகளை நாங்களே தீர்த்து கொள்ள முடியும் என கருதுகின்றேன்.

எமது சிவன் பவுண்டேசன் அமைப்பு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிகளைச்செய்து கொண்டிருக்கின்றோம். விளையாட்டு துறையை மேம்படுத்தல் கல்வி நடவடிக்கையை முன்னெடுத்தல் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வைத்தல் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றோம். அரசியல் அதிகாரத்தினை பெற்றுக்கொள்வதன் மூலம் மேலும் அதிகளவிலான மக்கள் பணிகள் செய்யலாம் எனக்கருதி அரசியலில் ஈடுபாடு காட்டி வருகின்றேன். இத்தேர்தலில் சஜித் தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் என்னுடைய தலமையில் முண்ணனிமிக்க தலைசிறந்த வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கின்றது.

சஜித் பிரேமதாச அரசியல் அனுபவம் மிக்கவர் தமிழ் மக்களின் துயரங்களை நன்கறிந்தவர். அவருடைய அணுகுமுறைகள் செயற்பாடுகள் எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு மிக்கதாக உள்ளன. கட்சி வேறுபாடுகளை மறந்து அவரை ஆதரிக்க வேண்டிய கட்டாயமான தருணத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

கேள்வி: உங்கள் குறிக்கோள் என்ன?

பதில்:என்னுடைய அரசியல் பயணம் வெறுமனே தமிழ் மக்களின் விடுதலைக்கானது அல்ல. அபிவிருத்தியிலும் கல்வி மேம்பாட்டிலும் முன்னோக்கி செல்வதற்கான அரசியல் என்னுடையது. இந்த சேவைகளை கருத்தில் கொண்டு மக்கள் எம்மை ஆதரிக்க வேண்டும். விசேட தேவையுடைய பிள்ளைகளின் நலன்கருதி அவர்களுடைய மருத்துவ சேவையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன். நான் கடந்த 5 வருடங்களில் என்னுடைய சொந்த நிதியில் மக்களுடைய பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினகரன்

Comments are closed.