11 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண்: தனது வீட்டருகே காதலன் வீட்டில் ரகசியமாக குடும்பம் நடத்தியது அம்பலம்!

11 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான 29 வயது பெண் ஒருவர் அவர் மாயமான அவருடைய வீட்டின் அருகிலேயே காதலனின் வீட்டில் உள்ளவர்கள் உட்பட யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஜிதா (அப்போது அவருடைய வயது 18). பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு திடீரென சஜீதா மாயமாகிவிட இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல இடங்களில் தேடியும் சஜிதாவை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவே இல்லை.

இந்நிலையில் சஜீதா 11 ஆண்டுகளாக அவரின் காதலனுடைய வீட்டில் ரகசியமாக ஒரு சிறிய அறைக்குள் மறைந்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. காதலுக்காக இப்படியும் கூட ஒரு பெண்ணால் இருக்க முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சஜிதாவின் 11 ஆண்டுகால வாழ்க்கை இருந்துள்ளது. சஜிதா காதலன் ரஹ்மானின் வீட்டில் 11 ஆண்டுகளாக ஒரு அறைக்குள் ரகசியமாக குடும்பம் நடத்திய நிலையில் சஜிதா அந்த வீட்டில் இருந்தது ரஹ்மானின் குடும்பத்தினருக்கே தெரியாதது ஆச்சரியத்தில் உச்சத்துக்கே நம்மை கொண்டு செல்கிறது.

ரெஹ்மானும், சஜிதாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய காதலை பெற்றோர்கள் ஏற்கமாட்டார்கள் என கருதியதால் சஜிதா, அவருடைய வீட்டைவிட்டு வெளியேறி ரஹ்மானின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவர் ரஜ்மானுடைய வீட்டிலேயே இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ரகசிய வாழ்க்கை நடத்தியிருக்கிறார். ரஹ்மான் தன்னுடைய ரூமுக்குள் யாரையுமே அனுமதிக்கவில்லை என்றும் மீறி அந்த ரூமின் அருகே சென்றால் அவர் கடுமையான கோவத்தை வெளிப்படுத்தியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் அவருடைய சாப்பாட்டை கூட ரூமுக்குள் சென்று தான் அவர் சாப்பிட்டதாகவும், யாருடனும் பேசாமல் பித்து பிடித்தவர் போல தன்னை காட்டிக்கொண்டதாகவும், எனவே அவருக்கு மன நிலை சரியில்லை என நினைத்து ஒதுங்கியதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மட்டுமே சஜிதா ரூமை விட்டு வெளியே வந்திருக்கிறார். ரஹ்மான் கொடுக்கும் உணவை ரூமுக்குள்ளேயே வைத்து சாப்பிட்டிருக்கிறார். துணிகளை கூட அந்த ரூமுக்குள்ளேயே உலர்த்தியிருக்கிறார். இரவில் சஜிதா வெளியே வருவதற்காக அவருடைய ரூமில் சிறிய துளையிட்டுள்ளார் ரஹ்மான். நள்ளிரவு நேரங்களில் யாரும் இல்லாத போது ரூமை விட்டு வெளியே வந்து சிறிது நேரம் இருவரும் நடப்பார்களாம். ரஹ்மான் பெயிண்டராக வேலை பார்த்து வருவதால் பகல் நேரங்களில் வேலைக்கு சென்றுவிடுவார். இத்தனைக்கும் ரஹ்மானின் வீடு, சஜிதாவின் வீட்டிற்கு 500 மீட்டர்கள் தொலைவில் தான் இருந்துள்ளது.

இருப்பினும் வீட்டில் இருந்தவர்களுக்கே தெரியாமல் இருவரும் இவ்வளவு ரகசியமாக தங்களது காதலுக்காக மறைந்து குடும்பம் நடத்திய சம்பவம் வெளி உலகுக்கு எப்படி தெரிந்தது என கேள்வி எழலாம்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திடீரென ரஹ்மான் மாயமாகிவிட, இது குறித்து காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் ஒரு நாள் ரஹ்மான் பக்கத்து கிராமத்தில் இருப்பதை பார்த்த அவருடைய சகோதரர் அங்கு சென்ற போது தான் இருவரிம் 11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை அம்பலத்துக்கு வந்திருக்கிறது. இருவரும் 11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை போதும் இனி தனியே சென்று வாழலாம் என முடிவெடுத்து பக்கத்து கிராமத்துக்கு சென்று அங்கு வாடகைக்கு குடியேறியிருக்கின்றனர்.

மாயமான வழக்கு நிலுவையில் இருப்பதால் காவல்துறையினர் இருவரையும் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சஜிதா, தன் காதலர் ரஹ்மானுடன் இணைந்து வாழ விரும்பியதால் அவருடனே அனுப்பி வைத்துள்ளனர்.

காதலனுக்காக மாயமான சஜிதா, 11 ஆண்டுகளாக ஒரே அறைக்குள் ரகசிய வாழ்க்கை நடத்தி வந்தது கேரளாவை மட்டுமல்ல நம்மையும் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.