இந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரம்!

அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு, எம்.எல்.ஏக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு வருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரே புகார் கூறியிருப்பது ராஜஸ்தான் அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

2018ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 199 இடங்களில் காங்கிரஸ் கட்சி 101 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தை பெற்றது. ஆனால் முதலமைச்சர் பதவியை கைப்பற்றும் விவகாரத்தில் சீனியரான அசோக் கெலாட்டுக்கும், ஜூனியரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மேலும் ராகுலுக்கு நெருக்கமானவராக அறியப்படும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களை தனியாக சந்தித்து நடத்திய பேச்சுக்கள் அப்போது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. பைலட் பாஜகவில் இணையலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பைலட் மற்றும் கெலாட் இருவரையும் சந்தித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து சீனியரான கெலாட்டை முதல்வராகவும், சச்சின் பைலட்டை துணை முதல்வராகவு அறிவித்தார்.

இருப்பினும் இருவருக்குமிடையேயான புகைச்சல் தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. இரு அணிகளாக செயல்பட்டு வரும் ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் உரசலை ஏற்படுத்தியிருக்கிறது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரம்.

சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏவான வேத் பிரகாஷ் சோலன்கி, ராஜஸ்தான் அரசு சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்களுடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக பகிரங்க புகார் ஒன்றை கூறியுள்ளார். புகைந்து கொண்டிருந்த கோஷ்டி
மோதலை இந்த புகார் மீண்டு தட்டி எழுப்பியுள்ளது.

அமைச்சராக இருக்கும் பிரதாப் சிங் கச்சரியவாஸ், ராஜஸ்தான் அரசு யாருடைய தொலைபேசி உரையாடல்களையும் ஒட்டுக்கேட்கவில்லை, அப்படி ஒரு விவகாரமே ராஜஸ்தானில் இல்லை. இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது. யாராவது அப்படி நடக்கிறது என கூறுவதென்றால் நேரடியாக வாருங்கள். என்னிடம் கூறுங்கள், உங்களை முதல்வரிடம் நானே அழைத்துச் செல்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும் சச்சின் பைலட்டின் மற்றொரு ஆதரவு எம்.எல்.ஏவான முகேஷ் பக்கெர் என்பவர், சச்சின் பைலட் முகாமுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது, இதனை காங்கிரஸ் தலைமை தலையிட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரினார்.

சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இருவருக்குமிடையேயான உரசல் ஓசையில்லாமல் இருந்து வந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கு பிறகு தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது மீண்டும் ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் கோஷ்டி பூசலை வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.