நீண்ட நேரம் காத்திருக்க வைப்பு: பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட மாவட்ட ஆட்சியர்!

கரூரில், நியாய விலைக்கடையில் நீண்ட நேரம் காக்க வைத்ததற்காக பொது மக்களிடம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மன்னிப்பு கேட்டார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் கொரோனா சிறப்பு தொகுப்பாக 14 பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், 2ம் கட்ட நிவாரணத் தொகையும் வழங்கபட்டு வருகிறது. இந்த பணிகள் முறையாக நடைபெற்று வருகிறதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கரூர் நகர பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஜவஹர்பஜார் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்கு ஆட்சியர் பிரபுசங்கர் காலை 9.36 மணிக்கு சென்றார். ஆட்சியர் வரவுக்காக சுமார் 40 நிமிடங்கள் மக்களை அதிகாரிகள் காக்க வைத்துள்ளனர்.

இதை அறிந்த மாவட்ட ஆட்சியர், மக்களை எதற்காக காக்க வைத்தீர்கள் அதிகாரிகளை கடிந்துகொண்டதோடு எந்த காரணத்தைக் கொண்டும் மக்களை அலைக்கழிக்ககூடாது என அறிவுறுத்தினார். பின்னர், தனது வருகைக்காக நீண்ட காக்க வைக்கப்பட்டதற்காக பொதுமக்களுடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இதைக் கண்ட பொதுமக்களும், அதிகாரிகளும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியராக பிரபுசங்கர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொறுப் பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற அன்றே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது, அடிப்படையில் தான் ஒரு மருத்துவர் என்பதால் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா வார்டிற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள சிகிச்சை பெற்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.