அனைத்து சிறு கட்சிகளையும் இணைத்தே தேர்தல் சீர்த்திருத்தம் அணுகப்படும்.மனோ கணேசன்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு செயற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட உடன்படும் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக்கொள்ளப்படும். எவரையும் தவிர்த்து விட்டு பயணிக்கும் எந்தவித தேவையும் கிடையாது. ஜேவிபி தலைமையகத்தில் நேற்று முதல்நாள் நடைபெற்ற சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டமையால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் அழைக்கப்படவில்லை.

மேலும், இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை, பொது நன்மை கருத்தை தாமும் ஆதரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எம்பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்பியும் உறுதியளித்துள்ளனர் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

சிறு கட்சிகளின் தேர்தல் சீர்திருத்த பேச்சுவார்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏன் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை தொடர்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் இனரீதியான சிறு கட்சிகளும், அரசியல்ரீதியான சிறு கட்சிகளும் தேர்தல் சீர்திருத்தம் என்ற பொது பிரச்சினையை கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

இந்த பிரச்சினை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்க எம்பியுடன் பேசுகின்ற அதேவேளை, நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் எம்பியும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எம்பி உடனும் இது தொடர்பில் பேசியுள்ளோம்.

இன்றைய விகிதாசார முறைமையே எமது பொது நிலைப்பாடு என நாம் அவருக்கு கூறியபோது, சஜித் பிரேமதாச எம்பி, தான் இன்றைய விகிதாசார முறைமைக்கு முழு ஆதரவு தருவதாக எமக்கு உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக தமது கட்சி பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார எம்பியை அழைத்து அறிவுறுத்தல் வழங்கினார்.

அதேபோல், தேர்தல் சீர்திருத்த பேச்சுவார்தை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடனும் நான் நேரடியாக பலமுறை பேசியுள்ளேன். வடக்கு மாகாணத்தில் புதிய கலப்பு முறைமை தமக்கு சாதகமாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், நாடு முழுக்க சிதறி வாழும், தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மை கருதி தாமும் இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை ஆதரிக்க தயார் என கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் எம்பி என்னிடம் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக நான் அறிந்துள்ளேன்.

Leave A Reply

Your email address will not be published.