கொசுத் தொல்லை இல்லாத சிங்கார சென்னை.. ஆள் இல்லா விமானம் மூலம் பணிகள் மும்முரம்..

மழைக்கால நோய்களை தடுக்கவும், கொசுக்களே இல்லாத நகரமாக சென்னையை உருவாக்கிடவும் சுமார் 230கிமீ நீர் வழிப்பாதையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது சென்னை மாநகராட்சி. முதன் முறையாக ஆள் இல்லா விமானம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மெல்ல தனியத்தொடங்கியுள்ள நிலையில், சில தினங்களில் பருவமழை தொடங்கவுள்ளது. மழை தரும் மகிழ்ச்சிக்கு மத்தியில் மழைக்கால நோய்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதும் அவசியமாகிறது. மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு, காலரா போன்ற காய்ச்சல் பரவத்தொடங்கிவிடும். அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் தாக்கத்தின் வீரியம் சற்று மிகுதியாகவே காணப்படும்.

இந்நிலையில் பருவ மழைக்கு முன்னதாகவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது சென்னை மாநகராட்சி.
சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம், போன்ற பிரதான நீர்வழிப்பாதைகளோடு சிறிதும் பெரிதுமாக இணைப்பு கால்வாய்காள் சுமார் 230கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் பருவ மழைக்கு முன்பு முன்னெச்சரிக்கையாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.

கொசு மருந்து தெளிப்பதற்கு முன்பு மருந்து தெளிக்க திட்டமிடும் நீர் வழிப்பாதைகளில் மூன்று இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு லார்வா புழுக்களின் அடர்த்தியை கண்டரிந்து. அதற்கு ஏற்றார்போல் MLO எனப்படும் கொசுப் புழு நாசினி தெளிக்கப்படும். வழக்கமாக இந்த பணிகள் மாநகராட்சி ஊழியர்களை வைத்து மேற்கொள்ளும் நிலையில் இம்முறை முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.

அண்ணா பல்கலை கழகத்தோடு இணைந்து 3 ஆள் இல்லா விமானம் மூலம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சோதனை அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆள் இல்லா விமானங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டாலும் மாநகராட்சி ஊழியர்களும் இதே பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சி ஊழியர்களால் செல்ல முடியாத இடங்களுக்கும் ஆள் இல்லா விமானங்கள் மிக எளிதாக சென்று கொசு மருந்து தெளிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.