சு.கவைப் பலப்படுத்த ஓரணியாக வாருங்கள்! – வெல்கமவுக்கு தயாசிறி அழைப்பு.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு, சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திரக் கட்சியை மீட்கும் நோக்கில் புதிய கட்சியை குமார வெல்கம ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கூட்டு எதிரணிப் பக்கம் இருந்த குமார வெல்கம, அதன்பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் தாவினார். தற்போது ஏதோவொரு கட்சியை உருவாக்கியுள்ளார். அவரால் தனியாக கட்சியைப் பலப்படுத்த முடியாது.

எனவே, சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு எம்முடன் இணையுமாறு குமார வெல்கமவுக்கு அழைப்பு விடுக்கின்றோம். எமது கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் அவரும் ஒருவர்” – என்றார்.

அதேவேளை, நாட்டில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது எனவும் தயாசிறி எம்.பி. மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.