சிறப்பாக பணிபுரிந்தால் பென்ஸ் கார் பரிசு- பிரபல நிறுவனத்தின் சூப்பர் ஆஃபர்!

இந்தியாவின் மிகப்பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

உலக அளவில் பிரபல மென்பொருள் நிறுவனங்களில் ஹெச்.சி.எல். (HCL) முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தை தொடங்கிய ஷிவ் நாடார், தமிழகத்தைச் சேர்ந்தவர். சாஃப்ட்வேர் துறையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் HCL ஊழியர்களுக்கு எப்போதும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

மேலும், கொரோனா பொதுமுடக்க காலத்தில் அலுவலக செலவு குறைந்ததால் HCL பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தது. இதனிடையே, தற்போது ஊழியர்களை ஊக்குவிக்க மேலும் ஒரு அதிரடியான திட்டத்தை HCL வகுத்துள்ளது.

அதில்,சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் (Mercedes Benz) காரை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் தனது பணியாளர்களை ஊக்குவிக்க பென்ஸ் கார்களை வழங்குவது முதல் முறையல்ல. கடந்த 2013ம் ஆண்டு 50 பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளது.

இதற்கிடையே, இந்த ஆண்டு 22 ஆயிரம் பேரை புதிதாக பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பின் மூலம் ஹெச்சிஎல் நிறுவன ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.