எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரத்தினபுரியில் உயர்வு.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இரத்தினபுரி மாவட்ட தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் லக்மால் கோணார தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் 19 சுகாதாரப் பிரிவுகளில் 344 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்மடுல்ல, நிவித்திகல, கலவான, கிரிஎல்ல மற்றும் எல்பாத ஆகிய பொதுசுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் எலிக்காய்ச்சல் மரணங்கள் 5 பதிவாகியுள்ளன.

கடந்த வருடமும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகம் இனங்காணப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டமே முன்னிலை வகித்தது.

பலாங்கொடை பிரதேசத்திலேயே அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த பிரிவில் 35 பேரும், பெல்மடுல்ல பிரிவில் 33 பேரும், இம்புல்பே பிரிவில் 29 பேரும், கொலொன்ன பிரிவில் 28 பேரும், எஹலியகொட மற்றும் வெலிகேபொல பிரிவுகளில் 26 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எலபாத்தவில் 23 பேரும், கொடக்கவெல பிரிவில் 20 பேரும், குருவிட்ட மற்றும் கலவான ஆகிய பிரிவுகளில் 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மற்றும் கஹவத்த ஆகிய பிரதேச சபை பிரிவுகளில் 14 பேரும், எம்பிலிப்பிட்டிப் பிரிவில் 13 பேரும், நிதிவித்திகல பிரிவில் 7 பேரும், ஓப்பநாயக்க மற்றும் உடவலவ ஆகிய பிரிவுகளில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிரிஎல்ல பிரிவில் 7 பேரும், அயகம பிரிவில் 5 பேரும், இரத்தினபுரி மாநகர சபைப் பிரிவில் 4 பேரும் உள்ளடங்களாக ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 344 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.