வடமராட்சியைச் சேர்ந்த மூவர் கொரோனோத் தொற்றால் பலி மேலும் இருவரின் பி.சி.ஆர். அறிக்கைக்கு காத்திருப்பு.

பருத்தித்துறை மற்றும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 3 பேர் கொரோனாத் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

கரவெட்டியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். அவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்று காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் உயிரிழந்தார்.

பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் இரண்டு நாள்களாக வயிற்றோட்டம் காரணமாக சுகயீனப்பட்டிருந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார். வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்த அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது அயலில் கொரோனாத் தொற்றாளர்கள் உள்ள நிலையில் சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை சந்தை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் உயிரிந்துள்ளார். அவரது அயலில் உள்ளவர்கள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், பருத்தித்துறை பஸ் நடத்துநரான 58 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.