யாழ். வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனாத் தொற்றாளர்கள்! – பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவிப்பு

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தற்போதைய நிலவரத்தின்படி எமது வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் எல்லாமே கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கின்றன.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுக்குரிய மிகக் குறைந்த வளங்களுடன் எமது சேவைகளை நாம் முன் கொண்டு செல்கின்றோம். வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மிகுந்த நெருக்கடியை இதனால் சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில் இங்கு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதால் வைத்தியசாலை மிகவும் இக்கட்டான கட்டத்தில் உள்ளது.

எமது கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தில் 420 பேரைப் பராமரிக்கின்ற வசதிகளே இருந்தும் நேற்று 430 பேருக்கு மேல் அதிகமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வைத்தியசாலைக்குத் தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நாங்கள் இதுவரை ஒட்சிசன் சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள அனுராதபுரத்துக்கு மட்டுமே சென்றிருந்தபோதும் அங்கும் தட்டுப்பாடு உருவாக நேற்று முதல் கொழும்புக்கும் செல்லுகின்ற நிலை உருவாகியுள்ளது.

வைத்தியசாலைக்கு விபத்துப் பிரிவுக்குத் தினமும் 60 தொடக்கம் 80 பேர் வரையில் அனுமதிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கும் எமது சேவையை வழங்குவதால் கொரோனா நோயாளர்களைக் கவனிப்பதிலும் நமக்கு சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியதாக உள்ளது. எனவே, இவற்றைக் குறைக்க வேண்டும். இவற்றைக் குறைப்பதற்கான ஒரே வழி தேவையற்ற நடமாட்டங்களை குறைக்க வேண்டும் . அத்துடன் ஆடம்பரமான கொண்டாட்டங்கள், தேவையற்ற விழாக்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.