தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் கூர்ந்து கவனமாக செயல்பட வேண்டும் : ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க, அடுத்த 10 நாட்கள் கூர்ந்து கவனமாக செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத தொகுப்பிற்கு தற்போது வரை 63 லட்சத்து 76 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இதில் கூடுதலாக மத்திய அரசு 5 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகளை அளித்துள்ளன். மீதமுள்ள 16 லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளையும் விரைவில் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த மாதத்திற்கு மத்திய அரசு 1.04 கோடி தடுப்பூசி வழங்க உள்ளன.

தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் 3 நாட்களுக்கு பயன்படுத்தப்படும். கேரள மாநிலத்தில் பண்டிகையால் கொரோனா தொற்று அதிகரித்தது போன்று, தமிழகத்தில் அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அடுத்த 10 நாட்கள் மிகவும் கூர்ந்து கவனமாக செயல்பட வேண்டும்.

மேலும், எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நாள்தோறும் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று வருபவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3ஆவது அலை வந்தாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தயாராக உள்ளது.

மேலும், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றையும் பின்பற்ற வேண்டும்.” இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.