தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு யாழ். மேயர் மணி நன்றி தெரிவிப்பு.

தமிழகம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பில் தீர்மானங்கள் எடுத்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு யாழ்ப்பாணம் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு கணிசமான இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து தஞ்சம் கோரி ஏதிலிகளாக வாழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் தரவுகளின்படி 108 முகாங்களிலும் மற்றும் முகாங்களுக்கு வெளியிலுமாக 92,978 இலங்கை தமிழ் அகதிகள் தமிழகத்தில் வாழ்கின்றனர்.

இதுவரை காலமும் இலங்கைத் தமிழர்களில் பலர் அங்கு இரண்டாம் தர மக்களாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தன்னுடைய முதலாவது வரவு – செலவுத்திட்டத்திலேயே இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புகள், கல்விக்கான உதவித்தொகைகள், மானியங்கள், வீடமைப்பு போன்ற பல திட்டங்களை முன்மொழிந்து அதற்கான நிதியையும் ஒதுக்கி வைத்திருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்திருக்கின்றது.

தமிழகம் வாழ் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான தமிழக முதல்வரின் தீர்மானங்களுக்கு எனது நன்றிகளை ஈழத்தமிழர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

ஒரு தமிழக முதல்வராக தமிழகத்தில் வாழ்கின்ற எங்களுடைய உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கென்றொரு அங்கீகாரத்தை வழங்கியது போல் எங்களுடைய நீண்டகால அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கும் தமிழகத்தில் வாழ்கின்ற எமது உறுவுகள் தமது தாய்நிலம் திரும்பி அவர்களது தாய்மண்ணில் மகிழ்ச்சியாக வாழக்கூடிய வகையில் எமக்கான அங்கீகாரத்தை உலகப்பந்தில் பெற்றுத்தருவதற்கும் தாங்கள் செயலாற்றவேண்டும்.

தமிழகத்தை இந்தியாவின் முன்னிலையான மாநிலமாக மாற்றும் வகையில் முதல்வர் செயற்படுகின்ற விதம் எமக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு அப் பயணத்தில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.