சமூகத்தில் இன்னமும் வைரஸ் தொற்றாளர்கள்; வைத்திய நிபுணர் அபாய எச்சரிக்கை.

“இலங்கையில் டெல்டா வைரஸ் மேலும் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை இருக்கின்றது. தற்போதும் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் டெல்டா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதால் மிகவும் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடும்.”

இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறைப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“டெல்டா வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிக் கொண்டுள்ளது. இறுதியாக நாம் முன்வைத்த ஆய்வறிக்கையில் கூட தொற்றாளர்களில் 95.8 வீதமானோர் புதிய டெல்டா வைரஸ் தொற்று தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தோம்.

இவ்வருடம் ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் கண்டறியப்பட்ட பின்னர் அன்று தொடக்கம் நாளாந்தம் டெல்டா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாடு மீண்டும் நீண்ட முடக்கத்துக்குச் சென்றுள்ள நிலையில் நிலைமைகளைக் கட்டுப்படுத்த இது சாதகாமகவே உள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், குறித்த ஒரு மாதகாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதற்காகவோ அல்லது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதற்காகவோ நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது எனக் கருதுவது தவறானதாகும்.

நாட்டில் இன்னமும் டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையே காணப்படுகின்றது. அதேபோல் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கும் வரையில் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமையே இருக்கும்.

டெல்டா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டுள்ள காரணத்தால் நாம் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடுவது சவாலான விடயமே.

எனவே, மக்கள் இப்போது மட்டுமல்ல தொடர்ச்சியாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தமது மற்றும் அயலவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.