தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்புமனுத்தாக்கல் இன்று ஆரம்பம்

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. அலுவலக நாட்களில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், அதற்கு அடுத்த நாளே வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, அக்டோபர் 12ம் தேதி நடைபெறும்.

இதனிடையே ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் இணையவழி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது கட்சியின் வளர்ச்சி கருதி, தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் இன்றும், நாளையும் பெறப்படும் என்றும், விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் உரிய கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினருக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினருக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை, மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.