புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் வீட்டில் போதைப்பொருளும் துப்பாக்கியும் மீட்பு!

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டதொலவத்த பிரதேசத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றிலிருந்து போதைப்பொருட்கள், துப்பாக்கி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டதுலவத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் 55 கிராம் ஹெரோய்ன், 50 கிராம் ஐஸ் போதைப் பொருள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி, போதைப்பொருட்களை அளவீடும் செய்யும் இலத்திரனியல் தராசு என்பவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கி மற்றும் இலத்திரனியல் தராசு என்பவை பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.