‘சூம்’மில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீட்டிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு, அரசடி – பொற்கொல்லர் வீதியிலுள்ள வீட்டில் சிறுமியின் சடலம் காணப்படுகின்றது என நேற்றிரவு கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது மாணவி எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டில் இருந்தனர். சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ‘சூம்’ ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையில் இருந்தார். குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது ‘சூம்’ கற்றல் நடவடிக்கையிலிருந்த தனது தங்கை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார் என்று பொலிஸாரிடம் அக்கா தெரிவித்தார்.

சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்ணம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.