வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள்.

1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் போது சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனாலும், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது.

மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இதற்கிடையில், சீனாவின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சீனா அதிகாரப்பூர்வமாக தனிநாடாக 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நாளை தேசிய தினமாக சீனா கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சீன போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. மொத்தம் 38 சீன போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் நுழைந்தன. நேற்று காலையும், இரவும் சீன விமானங்கள் தைவானுக்குள் நுழைந்துள்ளன.

சீனாவின் ஜே-16 போர்விமானங்கள், குண்டுகளை வீசும் எச்-6 ரக போர்விமானங்கள் உள்பட 38 போர் விமானங்கள் தங்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த விமானங்களை இடைமறிக்கும் வகையில் தைவான் போர் விமானங்கள் செயல்பட்டதாகவும், ஏவுகணை அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் தைவான் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.