விடைபெறும் எகிப்து தூதுவர் ஆராய்ந்த விடயங்கள்.

பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறை தொடர்புகளை மேம்படுத்துவதை ஆராய்ந்தார்.தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்படவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty) அவர்கள்,

இன்று முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களை சந்தித்தார்.

எகிப்து நாட்டு பொது அமைப்பு ஒன்றின் ஒருங்கிணைப்பாளராகப் புதிதாக நியமனம் பெற்றுள்ள அவர், இலங்கையுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தான் தொடர்ந்தும் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும், ஹுஸைன் அவர்கள் தொடர்ந்து எடுத்துரைத்தார்.

இலங்கைக்கான எகிப்து தூதுவராக ஹுஸைன் அவர்கள் இந்நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்த சேவையை இதன்போது ஜனாதிபதி பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே மற்றும் எகிப்து தூதரகத்தின் ஆலோசகர் கரீம் அபுலெனயின் (Karim Abulenein) ஆகியோரும், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.