விரைவில் சுகாதார தொண்டர் நியமனம் -டக்ளஸிடம் ஜனாதிபதி கோட்டாபய உறுதி.

நீண்ட நாட்களாக நிரந்தர நியமனம் இன்றிக் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொண்டர்ளுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான இன்றைய(29.10.2021) சந்திப்பின்போதே, குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தொண்டர் விவகாரத்தினை கடந்த காலங்களில் சில அரசியல் தரப்புக்கள் குறுகிய அரசியல் நோக்குடன் கையாண்டமையினால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இன்றைய சந்திப்பின் போது, குறித்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற கடற்றொழில் அமைச்சர், சேவை மூப்புக் கவனத்தில் கொள்ளும் வகையில் மீண்டும் புதிதாக நேர்முகத் தேர்வுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடி சுகாதார தொண்டர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தன்னுடைய செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.