அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் அரசு.

அதிபர், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசு தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து நீண்ட காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் நியாயமானது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தற்போது பெற்றோர்களும் களம் இறங்கியுள்ளார்கள்.

பெற்றோர்கள் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பல இடங்களில் பாடசாலைகளுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலை, தொடருமாக இருந்தால் மாணவர்களுடைய கல்வி பெரிதளவில் பாதிக்கப்படும்.

அத்துடன், கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி நிலை பின்தங்கியுள்ளது.

இந்த விடயத்தை அரசு கருத்தில்கொண்டு அதிபர், ஆசிரியர்களுடைய கோரிக்கைகளைத் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.