வடமாகாணத்தின் ஓர் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும்……

நெடுந்தீவு இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை “Delft” என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. நெடுந்தீவு தலைத்தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிசேகத் தீவு, தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத்தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலிலிருந்து புறப்பட்ட ‘ஹீர்த் டீ போலோ’ (Hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத்தீவின் அழகையும் வளங்களையும் மனதில்கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல, இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்றானாம்.

இது யாழ்ப்பாணத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் இராமேஸ்வரத்திலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், புங்குடுதீவிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. நெடுந்தீவின் சுற்றளவு வெறும் 30 கிலோமீட்டர் ஆகவும், பரப்பளவு 48 சதுரகிலோமீட்டர் ஆகவும் காணப்படுகின்றது.
இங்கு ஆலங்கேணி, பெரியான்துறை, மாலவி துறை, பூமுனை, சாமி தோட்டம், வெல்லை, குந்துவாடி, தீர்த்தகரை ஆகிய ஊர்கள் உண்டு. இங்குள்ள மக்கள் இந்தியாவுக்கு செல்ல பெரியதுறை துறைமுகத்தினை பயன்படுத்துகின்றனர். மற்றும் மக்கள் படகுகளில் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, புங்குடுதீவு ஆகிய இடங்களுக்கும் பயணம்செய்யலாம். இதுதவிர இங்கு மாலசி துறை, கிழக்கு துறை, தாளை துறை, குடுவில்த்துறை, குவிந்தா துறை, வெலாத்துறை ஆகிய துறைமுகங்கள் காணப்படுகின்றது.

நெடுந்தீவில் கட்டை குதிரைகள்1660ம் ஆண்டுகளிலிருந்து திறந்த வெளிகளில் காணப்படுகின்றன. இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுநராக இருந்த ‘ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ்’ இந்தத் தீவில் தங்கியிருந்தபோது, இந்த மிருகங்களைக் கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார். பிரித்தானியர் ஆட்சியில் 19ம் நூற்றாண்டில் இவை ‘நோலான்’ என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன. இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டுசெல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கிலுள்ளது.

இதுதவிர இங்கு ‘பெருக்க மரங்கள்’ காணப்படுகின்றன. இது ‘பாலோபாப்’ என அழைக்கப்படுகின்றது. இம்மரம் கிழக்காபிரிக்க நாட்டிலிருந்து அரேபியர்களினால் 07ம் நூற்றாண்டுகளில் கொண்டுவரப்பட்டது.

போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அந்நியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. ‘வெடியரசன்’ நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி அமைச்சர்கள், படைவீரர்களுடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடியரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகின்றது. அந்நாளில் அப்படி ஒரு பலமான கோட்டையாக விளங்கியது. ஒல்லாந்தர் இந்த தொழினுட்பத்தைப் பயன்படுத்தி தாங்களும் கோட்டைகள் அமைத்துக் கொண்டனர் .

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் பெரியதுறையிலிருந்து எவரும் இந்தியாவிற்கு செல்லமுடியாதவாறு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இத்துறைமுகத்தை அண்டியே வெடியரசனுக்கும், மீகாமனுக்கு சண்டை நடந்ததாக வரலாறு கூறுகிறது.
இங்கிருந்து மலர்கள்ஆலயங்களுக்கு தமிழ்நாட்டுக்கு எடுத்துசெல்லப்பட்டன.

நெடுந்தீவில் ஆலங்கேணி
(இது திருக்கோணமலையில் இருப்பது அல்ல), பெரியான்துறை, மாவலித்துறை
(‘மா’ என்ற சொல்லுக்கு குதிரை என்ற அர்த்தம் உள்ளது. எனவே குதிரைகள் ஏற்றி இறக்கியதனாலேயே மாவலி என்ற பெயர் உண்டாயிற்று), பூமுனை
சாமித்தோட்டமுனை, வெல்லை, குந்துவாடி, தீர்த்தக்கரை என்று ஊர்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் தனிக்கதைகள் உண்டு. ஆனால் அவை யாவும் யுத்தத்தால் அழிந்துவிட்டன. கர்ணபரம்பரை கதைகளை முதியவர்கள் மூலமே செவி வழியாகப் பரவின. ஆனால் காலத்தின் கோலத்தால் வயோதிபர் மடங்கள் பெருகியிருப்பதும், பேரப்பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லிக் கொடுக்க முடியாமலும் வரலாறுகள் அழிந்து கொண்டிருக்கின்றன.

ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்த மாவிலித் துறைமுகத்திலுள்ள வெளிச்ச வீடு மூன்று உருளைத் தூண்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கட்டப்பட்டதுபோல் அமைவு பெற்று, அதன் மேல் கூம்பு வடிவமான ஓர் முடியும் காணப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு வகையான வெளிச்ச வீடுகளும் கப்பல் திசை மாறாது செல்வதற்கு ஒவ்வொரு வகையான ஒளிச்சமிக்ஞைகளைக் கொண்டுள்ளது. இந்த வெளிச்ச வீடு 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது இரவில் தொடர்ந்து ஒளியை வீசிய வண்ணம் விளங்குகின்றது)
நெடுந்தீவு இறங்கு துறையிலிருந்து கிழக்காக சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரத்தில் பெருக்கு மரம் காணப்படும். குருதிப்பெருக்கம், நரம்புத் தளர்ச்சி, அம்மை, இரத்த அழுத்தம், தொற்றுநோய் ஆகியவற்றுக்கு பெருக்குமரத்தின் இலைகள், பட்டைகள், வேர்கள் போன்றவை பயன்படுகின்றன. ஏறத்ழாழ 400 வருடகாலம் பழைமையான இந்தப் பெருக்குமரத்தைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை.
இந்தப் பெருக்கு மரம் அழிந்தால் இலங்கை அழிந்துவிடும் என ஓர் ஐதீகம்.

இக்கோட்டையை அண்மித்துள்ள பகுதிகளில் மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், வட்டமான நாணயங்கள், சதுரமான நாணயங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன இங்கு 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு வருகின்றனர். இலங்கை பாராளுமன்றத்தின் முதல் சபாநாயர் நெடுந்தீவை சேர்ந்த “சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி” அவர்கள் என்பது ஊருக்கு மற்றுமோர் சிறப்பு.

Leave A Reply

Your email address will not be published.