1,160 ஊழியர்கள் பணியாற்றி வரும் தொழிற்சாலையில் 45 இந்தியப் பிரஜைகளுக்குத் தொற்று.

அம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 45 இந்தியப் பிரஜைகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அம்பந்தோட்டை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் குறித்த சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றிவரும் 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 45 இந்தியப் பிரஜைகளுக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான தொழிலாளர்கள், அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

குறித்த தொழிற்சாலையில் தமிழர்கள், சிங்களவர், இந்தியர்கள் உள்ளடங்களாக 1,160 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 480 இந்தியர்கள் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.