யாழிலுள்ள பனை அபிவிருத்திச் சபை ஒருபோதும் கொழும்புக்கு மாற்றப்படாது! – அரசு உறுதி

யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபை ஒருபோதும் கொழும்புக்கு மாற்றப்படாது. அது தொடர்ந்தும் யாழ்ப்பாணத்திலேயேதான் செயற்படும் என்று பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சி.சிறிதரன், ‘யாழ்ப்பாணம் மாவட்டத்திலே இருக்கின்ற குறிப்பாக வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பனை அபிவிருத்திச் சபையைக் கொழும்புக்கு மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனுடைய தலைவராக தற்போது முதன்முதலாக ஒரு சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறினார்.

இதற்குப் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளிக்கும்போது, “யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபை ஒருபோதும் கொழும்புக்கு மாற்றப்படாது. அது தொடர்ந்தும் யாழ்ப்பாணத்திலேயேதான் செயற்படும். இதன் முதலீடுகளினால் உங்கள் மாகாணத்துக்குத்தான் நன்மைகள் கிடைக்கும்.

அத்துடன் எனது அமைச்சுடன் தொடர்புபட்ட விடயங்களில் உங்களுக்கு ஏதாவது அநீதிகள் இடம்பெறுமானால் உடனடியாக எனக்கு அறியத்தாருங்கள். நான் உங்களுக்கு நீதி வழங்குவேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.