“ஒரே நாடு ஒரே சட்டத்துக்காக” ஜனாதிபதி செயலணி மட்டக்களப்பிற்கு விஜயம்!!

“ஒரே நாடு ஒரே சட்டத்துக்காக” பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிதல் நேற்று (04) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர்கூடம் என்பவற்றில் இடம்பெற்றிருந்தது.

பௌத்த தேரர்கள், மதத் தலைவர்கள், தொழிற்றுறையினர், சமூக செயற்பாட்டாளர்கள் நீண்டகாலமாக பிரதேசத்தில் நிலவி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தனர். ஆலோசனைகள் வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குழுவினரிடம் முன்வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி – 06 பதுரியா ஜூம்மா பள்ளிவாயல்
உள்ளிட்ட மதஸ்தலங்களுக்கு ஜனாதிபதி செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித சங்கைக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை மத வழிபாட்டுத் தலங்களுக்கும் செயலணியின் உறுப்பினர்களை சென்று சுமூகமாக கலந்துரையாடியுள்ளனர். இதன்போது விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், ஆசிர்வாதமும் அளிக்கப்பட்டது.

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு கலந்துரையாடல்களில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித சங்கைக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில், நீண்டகாலமாக நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக தற்போதைய ஜனாதிபதி அவர்கள் நேர்மையாக முயற்சிப்பதாகவும் உண்மையான அமைதி, நல்லிணக்கத்தை எதிர்பார்க்கின்ற பௌத்த தேரர்கள், தமிழ் பூசகர்கள், முஸ்லிம் மௌலவிமார்கள், கிறிஸ்துவ பாதிரிமார்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் ஒருசேர ஒரே நாடு ஒரே சட்டத்தைக் கேட்டு, இச்சந்தர்ப்பத்தில் முன்னின்று செயற்பட வேண்டுமென தேரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.