சுமந்திரன் – சாணக்கியன் எம்.பிக்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது!

“சிங்கள மயமாக்கத்தையோ பௌத்த மயமாக்கத்தையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி., மக்களை ஏமாற்றுவதற்காக வடக்கு – கிழக்கு இணைந்த முதலமைச்சர் என்ற விடயத்தைத் தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது:-

“தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கல், சிங்கள மயமாக்கல் போன்ற செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தாவிடின் தமிழர் தேசத்தின் இருப்பை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழர் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட வேண்டும்.இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு – கிழக்கை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.

ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது. அதேவேளை, வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்குத்தான் அதிகாரம்.

அதேபோன்று அந்த ஆளுநருக்குக் கீழுள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளைப்படிதான் நடப்பார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர்தான் நியமிப்பார்.

அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ்தான் இருக்கும். ஆகவே, மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களைக் கூற முடியும்.

ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஒருபோதும் சிங்கள மயமாக்கத்தையோ – பௌத்த மயமாக்கத்தையோ தடுக்க முடியாது.

இது 1987 – 1988 ஆண்டுகளில் இருந்து மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து நடைமுறையில்தான் இருக்கின்றது. இந்தச் சபை இணைந்தும் இருந்தது.

குடியேற்றம் அந்தவேளையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆயுதப் போராட்டத்தால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதுதான் உண்மையான விடயம்.

சாணக்கியன் எம்.பி. மக்களை ஏமாற்றி வருகின்றார். என்னைப் பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.

2015 ஆண்டு எமக்குக் கடைசி சந்தர்ப்பம் ஒன்றைத் தாருங்கள் என்று கூறினார்கள். அதாவது வடக்கு – கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சமஷ்டி தீர்வைப் பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள்.

அதேபோன்று 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள்.

மக்கள் அதனை நம்பி பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள். வென்று மறு வாரமே சுமந்திரன் எம்.பி. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறினார்.

ஜெனிவாக்குச் சென்று உள்ளக விசாரணைக்கு வாய்ப்புப் பெற்றுக் கொடுத்தார்கள். இப்படி இவர்கள் தமது ஏமாற்றுக்களைத் தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள்.

இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள். முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன.

மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.