நான் தெலுங்கு பேசும் தமிழ்ப் பையன் என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ளார்கள். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

இதில் அல்லு அர்ஜுன் பேசியதாவது:

”ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக இப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தோம். பொதுவாக, படத்துக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குப் பிடிக்காது. நான் கஷ்டப்பட்டு நடிப்பதில்லை, இஷ்டப்பட்டு நடிக்கிறேன். ஆனால், படக்குழு இப்படத்துக்காக பட்ட கஷ்டம் அதிகம். ‘புஷ்பா’ நான்கு படங்களுக்குச் சமமான ஒரு படம் என்று எப்போதும் சொல்வேன். இப்படம் தமிழ்நாட்டில் இவ்வளவு பிரபலமானதற்கு என் நண்பர் தேவிஸ்ரீ பிரசாத் கொடுத்த அருமையான இசைதான் காரணம். ‘சாமி சாமி’ பாடல் தமிழில் ஹிட் ஆனது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

வட இந்தியாவில் என் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. ஆனால், தமிழில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று விரும்புவேன். ஏனெனில் நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான் என்பதால் தமிழ் ரசிகர்கள் என் படத்தைப் பார்த்தால் எனக்குப் பெரும் திருப்தியாக இருக்கும். என் நண்பர்கள் என்னிடம் ‘நீ தெலுங்கு பேசும் தமிழ்ப் பையன்’ என்று சொல்வார்கள். நான் இப்போது தமிழ்நாட்டில் இருப்பதால் இதைச் சொல்லவில்லை. 20 வருடங்கள் நான் இங்கே இருந்துள்ளதால் நான் யோசிப்பதுகூட அப்படித்தான் இருக்கும்”.

இவ்வாறு அல்லு அர்ஜுன் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.