நெருக்கடி நிலைமைக்கு அரசே முழுப் பொறுப்பு! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு.

“ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர பதவி விலகுவதால் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இரசாயன உரத்துக்குத் தடை விதித்துவிட்டு 24 மணிநேரத்துக்குள் சேதன பசளையை நோக்கி நகரும் தவறான முடிவை இந்த அரசு எடுத்தது. இதன் விளைவாக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும். குறிப்பாக அடுத்த இரு மாதங்களில் அரிசி விலை 400 ரூபாவரை உயரும். தற்போது ஒரு கிலோ கீரி சம்பா 250 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் அறிவித்தார். அவரின் அறிவிப்பு சரியானது. எனினும், அதற்காக அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய நிலைக்கு ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவே காரணம் எனச் சிலர் விமர்சிக்கின்றனர். அரசின் தவறாக முடிவுகளே காரணம். எனவே, ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.