அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும்! – நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் எச்சரிக்கை.

“இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், உணவு பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அரசு குறிப்பிடும் கருத்து வெறுக்கத்தக்கதாக உள்ளன. காலையில் எந்தப் பொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள் இரவு நித்திரைக்குச் செல்கிறார்கள். வெகுவிரைவில் பொதுமக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடுவார்கள்.”

– இவ்வாறு நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அத்தியாவசியப் பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் அரசு எதற்கு? அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், உணவுத் தட்டுப்பாடு குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவையாகக் காணப்படுகின்றன.

சதொச விற்பனை நிலையத்தில் அனைத்து உணவுப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம் என அவர் குறிப்பிடுகின்றார். ஆனால், பொதுமக்கள் அதற்கு மாற்றீடாகக் கருத்துரைக்கின்றார்கள்.

சதொச விற்பனை நிலையங்களிலும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன செல்லும் சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி காட்சிப்படுத்தப்படுகின்றன.

அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பொதுமக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிடச் செல்லும் சதொச விற்பனை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளும், பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன.

தற்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பால்மா உற்பத்தியிலான ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் வர்த்தகத்துறை அமைச்சு, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆகிய தரப்பினர் எதற்கு?

காலையில் எப்பொருளின் விலை அதிகரிக்கப்படும் என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள் இரவு நித்திரைக்குச் செல்கின்றார்கள்.

அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள தற்போது வரிசையில் காத்திருக்கும் மக்கள் வெகுவிரைவில் அரசுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். நுகர்வோர் அதிகார சபை செயற்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.