கொரோனாத் தடுப்பூசி அட்டையைக் கட்டாயப்படுத்தல் ஒத்திவைப்பு!

இலங்கையில் இம்மாதம் முதலாம் திகதி முதல் கொரோனாத் தடுப்பூசி அட்டையைக் கட்டாயப்படுத்தும் தீர்மானம் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனச் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த விடயத்தில் சட்டச் சிக்கல்கள் எவையும் இல்லை. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் தடுப்பூசி அட்டைகளைச் செல்லும் இடங்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாகக் கையடக்கத் தொலைபேசிகளில் கியூ.ஆர். குறியீடு ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் உரிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அதற்கமைய கியூ.ஆர். குறியீட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தொழிநுட்ப அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான நடைமுறைகள் வெகுவிரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.